சந்திரனின் யோகங்கள் :
சந்திர கிரகம் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தப்படியாக தனி முக்கியத்துவம் வாய்ந்த கிரகம் ஆகும். ஜோதிட நூல்களில் சந்திரன் ஆனவர் அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்கு காட்சி கொடுப்பவர் சர்வம் சந்திர கலாபிதம் என்று குறிப்பிட்டுள்ளது.
ஜோதிடம் தெரிந்த மற்றும் தெரியாதவர்கள் யாராக இருப்பினும் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் என்ன? என்பது தான். எந்த நட்சத்திர தினத்தன்று நாம் பிறந்தோமோ அது நமது ஜென்ம நட்சத்திரம். அந்த நட்சத்திரத்துக்கான ராசி ஜென்ம ராசி அல்லது ஜனன ராசி ஆகும்.
இந்த ஜென்ம ராசியின் அடிப்படையில் தான் யோகங்கள் உண்டாகின்றன. அதுபோல குருபலம் ஏழரை சனி அஷ்டமசனி கண்டசனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன. எல்லா திதிகளிலும் சந்திர சூரியன் ஆளுமை இருக்கும்.
சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை ஆகும். சூரியனுக்கு 7ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது பௌர்ணமி நாளாகும்.
சந்திரன் பலவகையான யோகங்களை தருபவர். சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும். சந்திரன் மாதுர்காரகன் அதாவது தாயின் பலம் நிலைமை குறித்து அறிய முடியும். சந்திரன் மனோகாரகனும் கூட அதாவது மனதை ஆள்பவன். அமைதி திருப்தி கருணை நிம்மதி இரக்கம் காதல் சிந்தனைத் திறன் கற்பனை வளம் ஆகியவற்றை நிர்ணயிப்பது சந்திரனே.
சந்திரன் ஆதிக்கத்தால் பல துறைகளில் சிறந்து விளங்குவார்கள். சந்திரன் உச்சம் பெறும் ரிஷப ராசியிலும் ஆட்சி பெறும் கடக ராசியிலும் பிறப்பது மிகவும் சிறப்பு. லக்னத்தில் சந்திரன் இருப்பதும் லக்னத்தை சந்திரன் பார்ப்பதும் நல்ல யோகம்.
சந்திரனின் யோகங்கள் :
மேஷ லக்னம்/ராசி நிலபுலன் கல்விச் செல்வம் வெளிநாடு செல்லும் யோகம்.
ரிஷப லக்னம்/ராசி எதிலும் முதன்மை ஸ்தானம்.
மிதுன லக்னம்/ராசி சொல்லாற்றல் கதை கவிதை இசைத்துறைகளில் ஏற்றம்.
கடக லக்னம்/ராசி கற்பனை சக்தி புகழ் கீர்த்தி பேச்சாற்றல்.
துலா லக்னம்/ராசி தொழில் வியாபாரத்தில் பெரிய யோகங்கள்.
விருச்சிக லக்னம்/ராசி சகல பாக்கியங்களும் பெறும் யோகம்.
மகர லக்னம்/ராசி வெளிநாடு வாசம் தண்ணீர் தொடர்பான துறைகளில் ஏற்றம்.
மீன லக்னம்/ராசி பூர்வ புண்ணிய அமைப்புகளின்படி யோகம் குழந்தைகளால் செல்வாக்கு.
மற்ற லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும்.
வழிபாடு :
பௌர்ணமி விரதம் சிறப்பான பலன்களை தரும். சத்யநாராயண பூஜை செய்வது நன்மை அளிக்கும். அம்மன் கோயில்களில் மாலை நேர வழிபாடு நல்லது. பக்தர்களுக்கு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம்.
திருவோண நட்சத்திரத்தன்று பெருமாள் கோவிலில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மஞ்சள் குங்குமம் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் வழங்கலாம்.
பவுர்ணமி அன்று சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் வழிபாடு செய்து சந்திர தரிசனம் செய்யலாம்.
நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகில் உள்ள வரகுண மங்கை கும்பகோணம் அருகே உள்ள திங்களூர் ஆகியவை சந்திர பரிகார ஸ்தலங்கள் ஆகும்.
சந்திரனுக்கு உண்டான முக்கிய திருத்தலம் திருப்பதி. இங்கு சந்திரனாகவே ஏழுமலையான் அருள்பாலிக்கிறார்.