![]() |
அருள் மிகு சோமநாத முடையார் |
தரிதரத்தை போக்கி செல்வ வளத்தை தரும் வெண் தாமரை தண்டினால் ஆன சிவ லிங்கம் -பெருமகளுர் சோமநாதத் திருக்கோவில். உலகில் வேறு எங்கும் காண இயலாத 108 இதழ் கொண்ட தாமரை மலர் இங்கு மட்டுமே உள்ளது. தஞ்சை மன்னன் ராஜ ராஜ சோழனின் பெரிய மகள் திருமணம் செய்து கொடுத்த இடம் இந்த பெருமகளுர். தன்னுடைய பெரிய மகளை திருமணம் செய்து கொடுத்தமையால் பெரியமகளூர் என்று ஆனது. தற்போது பெருமகளுர் என மாறியது. மேலும் தகவலுக்கு - நக்கீரன் +917904599321
![]() |
சோமநாதர் ஆலயம் |
மூலவர் : சோமநாதமுடையார்
அம்மன்/தாயார் : சுந்தராம்பிகை,
குந்தளாம்பிகை
தல விருட்சம் : செந்தாமரை
கொடி
தீர்த்தம் : லெட்சுமி
தீர்த்தம்
புராண பெயர் : சதூர்வேதி
மங்கலம், பெருமூள்ளுர், பேரூர்
ஊர் : பெருமகளூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
தலபெருமை:
குந்தளாம்பிகை
உடனுறை சோமநாதர், இவ்வூரின் நடுவில் கோயில் கொண்டு
அருளுகிறார். தாமரை விளங்கும் குளிர்ந்த பொய்கை அருகே திகழ சோமநாத சுவாமியின்
திருக்கோயில் சிறப்பாக விளங்குகிறது. கிழக்கு நோக்கிய திருவாயில், திருமதில் திருச்சுற்று, பரிவாராலயங்கள்,
இடப்பக்கத்தில் நந்தி மண்டபம், பலிபீடம் ஆகியவை அழகு செய்ய, சிதிலமடைந்த
நிலையில் மூலவர் விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதி ஆகியவற்றுடன்
திருக்கோயில் விளங்குகின்றது. மகாமண்டபத் தூண்களில் அழகிய கலை வேலைப்பாடும்,
புராணக்கதைகளை விளக்கும் சிற்பக்காட்சிகளும் விளங்குகின்றன.
விநாயகப் பெருமான் அருள் காட்சி நல்க, குந்தளாம்பிகை
அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். சிவனது மூலஸ்தானத்தில் சதுர வடிவ
பீடத்தில் சுயம்பு லிங்கமாக பாணம் விளங்க, சோமநாதரின்
மூலவர் திருமேனி காட்சி தருகின்றது.
சுயம்பு லிங்கம்: ஆவுடையார் என்னும்
கருங்கல்லால் அமைந்த சதுர பீடத்தில், விடங்க
மூர்த்தியாக சோமநாதர் பாண வடிவத்தில் காட்சி தருகிறார். பொதுவாக கல்லால்
அமைக்கப்பெறும், லிங்கத்திருவுருவங்களின் பாணம்,
வட்ட வடிவில் தான் இருக்கும். பல்லவர் கால தாரா
லிங்கங்கள் மட்டும் பட்டை பட்டையான வடிவில் பாணம் காணப்பெறும், சகஸ்ரலிங்கங்களில் ஆயிரம் சிறு லிங்க வடிவங்கள் ஒரே பாணத்தில்
செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு விடங்க வடிவமாகும். விடங்கம் என்பது, சிற்பியால், உளி கொண்டு செதுக்கப்படாத
திருவடிவமாகும். திருவாரூர் கோயிலில் புற்றே லிங்கமாக மாறி விட்டதால், விடங்க மூர்த்தியாக காணப்படுகிறார். இவரை வன்மீகர் என்றும், புற்றிடங் கொண்டார் என்றும் அழைப்பார்கள். திருநல்லூரில் உலோகப்
படிவுப்பாறையே லிங்க பாணமாக விளங்குகிறது.
திருவையாற்றில் பிருத்வி எனும் மண்ணே
லிங்க பாணமாக, பாறையாக மாறி காட்சி தருகின்றது. சில
இடங்களில் மட்டுமே, மிக அபூர்வமாக கல்லாக மாறிய மரத்தின்
அல்லது செடிகளின் பகுதிகளே லிங்க பாணமாக விளங்குகின்றன. புதுக்கோட்டை மாவட்டம்
மணமேல் குடிக்கு அருகில் உள்ள, மஞ்சக்குடி சிவாலயத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு
மரமாகத்திகழ்ந்த ஒரு பகுதி கல்லாக மாறி அதுவே அங்கு சிவலிங்க பாணமாக காட்சி
தருகின்றது.
தாமரைத்தண்டு லிங்கம்: இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி தீர்த்தமானது, சிவனது தலையிலிருந்து விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த லட்சுமி தீர்த்தத்திலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும். இவ்வுலக மக்களுக்காக, திரிபுவன சித்தரின் தவ வலிமையால் இங்கு சிவனும் அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது. இந்த அருளாட்சி புரியும் சோமநாதரின் லிங்கம், கல்லால் அமையப் பெற வில்லை. தாமரைத்தண்டினால் ஆன சிவலிங்கம் இது. பாணலிங்கமே தாமரைத்தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப்போல், வேறு எங்கும் காண இயலாது. மிகவும் விசேஷமான தாமரைத்தண்டினால் இந்த சிவலிங்கத்தை தரிசித்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் பெருமகளூர் கிராமத்தில் உள்ள பொது குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது குளம் முழுவதும் செந்நிறமாக மாறியிருந்தது. இதை அறிந்த மன்னன் பதறி வந்து பார்த்த போது தண்ணீருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை அறிந்தான். தான் தவறு செய்து விட்டதாக சோழமன்னன் சிவலிங்கத்தை கட்டித் தழுவி தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் கட்டித்தழுவியபோது சிவலிங்கத்தின் மீது மன்னன் அணிந்து இருந்த முத்து, வைரம், வைடூரிய நகைகளின் தடயம் பதிந்தது. இதற்கு அடையாளமாக இன்றும் கூட சிவலிங்க பானத்தின் மீது அடையாளங்கள் உள்ளன. இதை அடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை தூர்த்து இந்த சோமநாதர் கோயிலை சோழ மன்னன் கட்டியுள்ளான். இக்கோவிலை பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்.
மேலும் தசரத மகாராஜா குழந்தை வரம் வேண்டி, புத்திர காமேஷ்டி யாகம் தொடங்கும் முன், மாபெரும் சோம யாகம் நடத்த எண்ணி தக்க இடத்தை தேர்ந்தெடுக்கு மாறு குலகுருவான வசிஷ்டர் மகரிஷியை வேண்டியுள்ளார். சோம யாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்து இருந்தனர். அத்தேதியில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை பெற்றுத் தருமாறு வசிஷ்டரை வேண்டியுள்ளார். வசிஷ்டர் கைலாயம் சென்று அகத்தியரை நாடி விளக்கம் வேண்டினார். திரிபுவன சித்தர் தவ செய்த இடமான, பெருமகளூரே, பூலோகம், பூவர்லோகம், சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களும் சோம யாகம் செய்ய சிறந்த இடமாகும். அத்துடன் அம்பர் மாகாளத்திற்கு ஈடான சிவதலமாகும். மேலும் இங்குள்ள மூலவர், இந்த யுகத்திலிருந்து சோமநாதர் என்ற திருநாமத்தை தாங்கி அச்சிவலிங்க மூர்த்தியாக அருள்பாலிப்பார் என்று அகத்தியர் விளக்கம் தந்திட, தசரத மகாராஜா இப்பெருமகளூர் சிவாலயத்தில் பெரும் சோம யாகத்தை இயற்றினார். சேதுகரை செல்லுகையில் ராமன் இத்தலத்தை பூஜித்துள்ளார்.